Friday, 29 July 2016

பறக்கத்தான் துடிக்கிறேன்


இன்றேனும்
காக்கைக்கு இறக்கை கொடுத்துவிட
ஓவியப் புத்தகத்துடன்
அலமாரி அடியே ஒண்டினாள்
ப்ரியா குட்டி..

இறக்கை வரைந்து
வானவில் வண்ணமிட்டு
பற பற காக்கா..பற பற
எனப் பாட
வான்குறி நோக்கி
அம்பாக காக்கா எத்தனிக்கையில்

'இங்கயாடி இருக்க?
போய் ஒழுங்கா வீட்டுப்பாடம் பண்ணு'
என இரைந்த அம்மா
காகத்தை அலமாரி சிறையில் அடைத்து..

பின்
மாயவெளிச்சம் நோக்கி
இழுத்துச் சென்றாள்..

இரவில் தொடரப்போகும்
கருத்த அழுகுரலை எண்ணி
விசனப்பட ஆரம்பித்தாள்
ப்ரியா குட்டி..

உருவகம்:
காகம்: ப்ரியா குட்டியின் கனவுகள்

படத்தை கடன் அளித்தவர்: www.pintrest.com

Thursday, 28 July 2016

விமோசனச் சிரிப்பு


காலை வருடிய சிப்பியை
காதோரம் பொருத்தினாள் சிறுமி

வினையான விளையாட்டின்
நண்பா வென்னும் கதறலும்,

'இந்த அபலனை ஏற்றுக்கொள் கடல்மாதா'
எனப் பாய்ந்த அபலக் குரலும்,

குண்டடிபட்ட கடலாளனின்
எதற்கென்ற குழப்பக் குரலும்,

வலையில் சிக்கிய துள்ளலின்
துடிக்கும் சாவுக் குரலும்,

என மற்றும் பலக்குரல்களும்...

முத்தின் கருவறைச் சிரிப்பு
மட்டுமேனோ கேட்டபாடில்லை..

முத்துச் சிரிப்பை உள்ளே திணித்து
அது வழிய அது வழிய
தூது அனுப்பினாள் சிறுமி
முத்தாக்கித் தரும்படி..

அதுசமயம்
முடிவிலி தொலைவில்
கடல்மாதாவின் கருவறையில்
கதறலும்
அபலக் குரலும்
குழப்பக் குரலும்
சாவுக் குரலும்
விமோசனத்தை எதிர்நோக்கின..

படத்தை கடன் அளித்தவர்: 500px.com

Wednesday, 13 July 2016

முடியா இரவும் கற்பனைக் கவிதையும்

உன்னைத் தொலைத்த ஓர் முடியா இரவில்,
இடி அழுகை..
மின்னல் கண்கள்..
பேய்மழை கண்ணீர்..
என வைரமுத்துவாய் அழகியலில் வருந்த எண்ண,
முடியா இரவில் ஏதடா அழகென
பின்மண்டை பேய் எகிறி அடிக்க,
சத்தமில்லா அழுகை..
நிலைகுத்திய கண்கள்..
வறண்ட கண்ணீர்..
என புதுக்கவிதையாய் வருந்த எண்ண,
முடியா இரவென்றாலும் கிட்டும் அழகடா அவளென
முன்மண்டை தேவதை வருடி கொடுக்க,
ஊஞ்சல் எண்ணங்களில் குரங்கு மனம் தாவ,
வருத்தப்படவும் இயலாமல்..
உன்னைத் தேடவும் முடியாமல்..
தூங்கிப் போகிறேன்.
இரவேனும் முடிந்துவிடக் கூடுமென்று..
ஆனால் அங்கே கற்பனை கவிதையாய் நீ..!!