பெருமழைக்குப் பின்னான
சிறுதூறல் போல்
பாலையில் பெய்யும்
உன் நினைவுகள்
முகம் நிரம்ப நிரப்பி
தழும்பித் தெறிக்க
தெளித்துச் செல்லும்
உன் சிரிப்புகள்
எங்கோ கேட்ட பாடலின்
நடுவுகளில் காற்புள்ளிகளாய்
என் பெயர் செருகும்
உன் பேச்சுகள்
தொடுதல் உணர்வு வேண்டி
எனக்கும் காற்றுக்கும்
பங்காளிச் சண்டை இழுக்கும்
உன் கூந்தல்கள்
நெடுஞ்சாலை வண்டியின் முகவிளக்குகளாய்
ஒளி கூட்டி குறைத்து
என்னிடம் பேசும்
உன் கண்கள்
மழைக்கால குழிகளில்
குதித்து விளையாடும் மிதிவண்டியாய்
மாற ஏங்க வைக்கும்
உன் கன்னங்கள்
இடைவெளிகளின் ஊடே
அலையும் காற்றின் வழியே
கடத்தி வரும்
உன் தொடுதல்கள்
என எண்ணி எண்ணி
மாய்ந்து பின்
கவிதைகளாய் மாற்றுகிறேன்
இப்பிதற்றல்களை..

No comments:
Post a Comment